ADDED : மே 28, 2026 06:17 AM

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த, 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், தலா, 1 கிலோ எடை கொண்ட, 3 கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் விழுப்புரம், ராம்பாக்கம், கோங்கம்பட்டு சுரேஷ்பாபு மகன் கிருஷ்ணமூர்த்தி, 24; குள்ளஞ்சாவடி, அப்பியம்பேட்டை குணசேகரன் மகன் ராஜாபூபாலன், 24; ஆகியோர் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி ரயில் மூலம் விழுப்புரம் வந்து குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளில் பொட்டலங்களை விற்க கொண்டு வந்தது தெரிந்தது.
அதையடுத்து, குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தி, ராஜாபூபாலன் இருவரையும் கைது செய்தனர். 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
