/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டெப்போவில் புகுந்து டிரைவரை தாக்கிய 4 பேர் கைது
/
டெப்போவில் புகுந்து டிரைவரை தாக்கிய 4 பேர் கைது
ADDED : ஜன 24, 2024 04:33 AM

விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் புகுந்து டிரைவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தை சேர்ந்தவர் மோகன், 49; இவர் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் விருத்தாசலம் பணிமனையில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் விருத்தாசலம்- மாளிகைமேடு டவுன் பஸ்சில் பணியில் இருந்தார். இரவு 9:45 மணிக்கு, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து, பஸ்சை டெப்போவிற்கு ஓட்டிச் சென்றார். அப்போது, பஸ் நிலையத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக பைக்கில் உட்கார்ந்து மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்த வாலிபரை, டிரைவர் மோகன் ஓரமாக செல்லுமாறு கூறினார். அதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின், டிரைவர் மோகன் பஸ்சை ஓட்டிச் சென்று டெப்போவில் நிறுத்திவிட்டு, வீட்டிற்கு பைக்கில் புறப்பட தயாரானார். அப்போது, பஸ் ஸ்டாண்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர் தனது ஆதரவாளர்கள் மூவருடன் டெப்போவிற்குள் புகுந்து டிரைவர் மோகனை ஆபாசமாக திட்டி, தாக்கினார்.
திடுக்கிட்ட பணிமனை ஊழியர்கள், டிரைவரை தாக்கிய வாலிபர்களை மடக்கி பிடித்தனர். மேலும், அத்துமீறி நுழைந்து டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெப்போ கேட்டை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து டிரைவர் மோகன் அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, வேலுார் திருவலத்தை சேர்ந்த விவேக்பால்,25; விருத்தாசலத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன்,34; நரசிம்மன் மகன் வினோத்,33; சவுந்தரராஜன் மகன் ஹரிஹரன், 34, ஆகியோரை கைது செய்தனர்.

