/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசின் இ-சேவை மையங்களில் கூடுதல் கணினி வசதி தேவை
/
அரசின் இ-சேவை மையங்களில் கூடுதல் கணினி வசதி தேவை
ADDED : ஜன 20, 2024 06:19 AM
தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில் இ-சேவை மையங்கள் வாயிலாக வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு காவல் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, மின் வாரியம், தேர்தல் ஆணையம், கல்வித் துறை என, பல்வேறு துறைகள் சார்பில் 50க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு சேவைக்கும் அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் வாரியாக 50க்கும் மேற்பட்ட, இ-சேவை மையம் செயல்படுகிறது.
இ சேவை மையங்களில் விண்ணப்பதாரர் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது, அவர் கூறிய விவரங்களை இ-சேவை மைய ஊழியர்கள் டைப்பிங் செய்ய வசதியாக ஒரு கணினி பயன்படுத்தப்படுகிறது.
விண்ணப்பதாரர் தான் கூறிய விவரங்கள் சரியாக உள்ளதா என, பார்த்து தவறு இருந்தால் அதை கூறி திருத்தம் செய்து கொள்ள வசதியாக மற்றொரு கணினி பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக எவ்வித பிழையும் இன்றி சான்றிதழ் பெறப்பட்டது.
இந்நிலையில், பெரும்பாலான மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கான கணினி பழுது ஏற்பட்டுள்ளதால் இ-சேவை மைய ஊழியர்கள் பயன்படுத்தும் கணினியிலேயே விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன் விண்ணப்பதாரர்களின் சான்றிதழில் திருத்தம் ஏற்படுகிறது. எனவே, கூடுதல் கணினிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.