எல்நினோ தாக்குதலால் விவசாய பயிர்கள் கருகி பாதிப்பு; உற்பத்தி குறையும் என்பதால் விவசாயிகள் கவலை
எல்நினோ தாக்குதலால் விவசாய பயிர்கள் கருகி பாதிப்பு; உற்பத்தி குறையும் என்பதால் விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 07, 2026 05:06 AM

கடலுார்: எல்நினோ காரணமாக குறுவை நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உற்பத்தி குறையும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். உலக காலநிலை அமைப்புகளில் மிகுந்த தாக்கத்தை எல்நினோ ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் வெப்ப நீரும், கிழக்கு பகுதியில் குளிர்ந்தநீரும் காணப்படும்.
ஆனால் எல்நினோ காலத்தில் இந்த இயல்பான நிலை மாறி, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகம் வெப்பமடைகிறது.
பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்ப நிலை சராசரியை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அது எல்நினோவாக கருதப்படுகிறது.
தற்போது கடல் மேற்பரப்பு வெப்ப நிலை வழக்கத்தை விட 0.7 டிகிரி செல்சியதாக அதிகரித்ததால், எல்நினோ காலம் தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக உயர 60 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் எச்சரித்துள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் அது சூப்பர் எல்நினோ என்று அழைக்கப்படும்.
தற்போது எல்நினோ தாக்கத்தால் கோடை, கத்தரி வெயில் முடிந்து ஜூலை மாதத்தில் கூட 102 டிகிரி வெயில் அடித்து வருகிறது. கடந்த ஜூன் மாத கடைசியில் 29ம் தேதி கடலுாரில் 102.2 டிகிரி, 30ம் தேதி 101.1ம், ஜூலை 1ம் தேதி 100 டிகிரி, 2ம் தேதியும் 102ம், நேற்று 102.29 டிகிரி பதிவானது.
இதன் காரணமாக விவசாயிகள் குறுவை சாகுபடி நடவு செய்துவிட்டு மேட்டூர் தண்ணீரை எதிர்நோக்கியுள்ளனர். நடவு செய்யப்பட்ட நெற்பயிரும் சரியான பச்சை பிடிக்காமல் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வானிலை யாளர் பாலமுருகன் கூறியதாவது:
கிழக்கில் இருந்து வரக்கூடிய ஈரப்பதமான காற்று 3 மீட்டர் உயரத்தில் வரும்போது, கடலுார் மாவட்டத்தில் மழையை கொடுக்கிறது. ஆனால் தற்போது மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து அதிக வேகத்துடன் வறண்ட காற்று வீசுகிறது.
இந்த காற்று தென் மேற்கு பருவமழையை கொடுக்கக்கூடிய ஈரப்பதமான காற்றை முற்றிலும் தடுக்கிறது. அதனால் கடலுார் மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக சராசரி 96 சதவீதம் மழைபெய்த நிலையில் இந்த ஆண்டு எல்நினோ காரணமாக மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்யக்கூடும். இன்னும் 10 நாட்கள் வறண்ட வானிலை காணப்படுவதுடன் வெப்பத்தின் தாக்கமும் அதிகரிக்கும். எல்நினோவால் வரலாறு காணாத வெப்பம் மாற்றம் ஏற்படும் என்பதை கணிப்பதும் கடினம்.
எல்நினோ முடிந்ததும் 'லா நினோ' தொடங்கும். இந்த காலத்தில் அதிக மழைப்பொழிவு மட்டும் இருக்கும் என்றார்.
