ADDED : பிப் 08, 2025 12:23 AM

குள்ளஞ்சாவடி : தம்பிப்பேட்டை பாளையம், ரங்கநாதபுரம் ஊராட்சிகளில் பயிரிடப்பட்டுள்ள, வம்பன்-8 ரக உளுந்து விதை பண்ணை வயல்களை, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் விஜயராகவன் ஆய்வு செய்தார்.
உளுந்து வயலில் மஞ்சள் நோய் தாக்க அறிகுறிகள் மற்றும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இதையடுத்து கீழூர் கிராமத்தில் நடந்த வேளாண் அடுக்கக ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு உருவாக்க முகாமில் கலந்து கொண்ட அவர், விவசாயிகளுக்கு தனி குறியீடு எண் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கிடங்கில் திட்ட இடு பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். குறிஞ்சிப்பாடி வேளாண் அலுவலர் வேல்முருகன், உதவி விதை அலுவலர் ஆறுமுகம், கார்த்திகா, அன்புக்கரசி உடனிருந்தனர்.