ADDED : மார் 11, 2026 04:40 AM
த மிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றன.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமை தங்கள் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு பிறகு வெளியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பூத் வாரியாக வாக்காளர் விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் அ.தி.மு.க., ஈடுபட்டுள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து அ.தி.மு.க., நிர்வாகி கூறுகையில், 'கட்சித் தலைமை 'பூத் கமிட்டி ஆய்வு புத்தகம்' என்ற பெயரில் புத்தகம் வழங்கியுள்ளது.
இதில், மாவட்டத்தில் பூத் வாரியாக ஆண், பெண் வாக்காளர்களின் பெயர், மொபைல் எண், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஓட்டுகள் எத்தனை, மாற்றுக் கட்சி ஓட்டுகள் எத்தனை உள்ளிட்ட விவரங்கள் பூர்த்தி செய்யப்படும்.
அதன் அடிப்படையில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, ஓட்டுகள் குறைவாக காணப்படும் இடங்களில் தேர்தலின் போது, கூடுதல் கவனம் செலுத்தப்படும். மேலும், தி.மு.க., வின் அதிருப்தி ஓட்டுகளை வளைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
