ADDED : பிப் 12, 2026 03:50 AM

சிதம்பரம்: அ.தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக, பாண்டியன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அ.தி.மு.க., ஆட்சியில், 100 நாள் வேலை, சம்பளம் சரியாக வழங்கப்பட்டது. கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது. ஆனால், வேலை திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும், பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
மத்திய அரசு வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி பணியாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில், சில மாறுதல்களை செய்துள்ளது. இது, தி.மு.க.,வினரின் முறைகேடுகளுக்கு இடையூறாக உள்ளதால் திட்டத்தை சீர்குலைக்கும் பணியில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
இதை கண்டித்து, நாளை கடலுார் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், 4 இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.
இதில், கட்சி தலைமை, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

