/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி ஒன்றிய உதவியாளர் மீது தாக்குதல்
/
ஊராட்சி ஒன்றிய உதவியாளர் மீது தாக்குதல்
ADDED : பிப் 17, 2026 05:19 AM
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரை, வாலிபர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டியிடம் வாலிபர் ஒருவர் தனது தாயுடன் மனு அளிக்க வரிசையில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் முருகன், 54; என்பவரை, வரிசையில் காத்திருந்த வாலிபர் திடீரென தாக்கினார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விருத்தாசலம், பாலக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது வாலிபர் என்பது தெரிந்தது.
அவரது தாய்க்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தரைதள கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், மற்ற கட்டுமான பணிகளுக்கு கம்பி, சிமென்ட் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் வழங்காததும், இது தொடர்பாக தாயுடன் மனு அளிக்க வந்ததது தெரிந்தது. இது குறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர். தன்னை தாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உதவியாளர் முருகன், டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டியிடம் மனு அளித்தார்.

