ADDED : ஏப் 20, 2026 11:17 PM

கடலுார்: கடலுாரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஏப்.14ம் தேதி தீத்தொண்டுநாள் கடைபிடிக்கப்படுகிறது. அதிலிருந்து ஒருவாரத்திற்கு தீத்தொண்டு வார விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கடலுார் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கடலுார் சில்வர் பீச்சில் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு, கொடியசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு மாரத்தான், கடலுார் சில்வர் பீச்சில் துவங்கி மாநகரப்பகுதிகள் வழியாக தீயணைப்பு நிலையத்தை வந்தடைந்தது. கடலுார் நிலைய அலுவலர் போக்குவரத்து பாபு, சிறப்பு நிலைய அலுவலர்கள் ராஜசேகரன், வைத்தியநாதன், முன்னணி தீயணைப்பாளர்கள் திருநாவுக்கரசு, சக்திவேல், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
