ADDED : மார் 28, 2026 06:48 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் சட்டசபை தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் எம்.ஆர்.கே., கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் காட்டுமன்னார்கோவிலில் நடந்தது.
தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கலால் துணை கலெக்டர் ராணி, கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, எஸ்.ஐ., சையத் அப்சல், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம் கச்சேரி தெரு, பஸ் நிலையம், உடையார்குடி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக சென்று நுாறு சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
