/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பறவை கணக்கெடுப்பு : மாணவிகள் பங்கேற்பு
/
பறவை கணக்கெடுப்பு : மாணவிகள் பங்கேற்பு
ADDED : மார் 18, 2025 10:51 PM

விருத்தாசலம் : வேப்பூர் அருகே பறவைகள் கணக்கெடுப்பு பணியில், வேளாண் மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
திருவண்ணாமலை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காமாண்டு மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், வேப்பூர் அடுத்த காட்டுமயிலுார் காப்புக்காட்டில், பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பயிற்சி பெற்றனர்.
அதன்படி, நீர்வாழ் பறவைகள் மற்றும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு குறித்து மாணவிகள் களஆய்வு செய்தனர். வனத்துறை அலுவலர் ரகுவரன் பறவைகள் கணக்கெடுப்பு வழிமுறைகள், முக்கியத்துவம் குறித்தும், வனக்காவலர்கள் நவநீதகிருஷ்ணன், ராம்குமார, ஆறுமுகம் ஆகியோர் பறவைகள் வகைகளை விளக்கினர்.
அதில், மாடப்புறா, மணிப்புறா, சிறிய தவிட்டுப் புறா, சின்ன மின்சிட்டு, சின்னான், செம்மீசை சின்னான், மஞ்சள் வாலாட்டி, செம்மார்பு குக்குறுவான், வெண்புருவ சின்னான், ஊதா தேன்சிட்டு, கருஞ்சிட்டு, குண்டுக்கரிச்சான் உள்ளிட்ட பறவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, கீழக்குறிச்சி மரகதப் பூஞ்சோலையில் பூச்செடிகள், மர செடிகள், பழம் தரும் செடிகள், மருத்துவ குணமுடைய செடி வகைகளை பார்வையிட்டனர். மேலும், பசுமை பரப்பை அதிகரிப்பது, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கம் தரப்பட்டது.