ADDED : ஜன 03, 2026 04:55 AM

விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடைக்கு செல்வதற்காக சேதப்படுத்திய சென்டர் மீடியன் சீரமைக்கப்பட்டது.
விருத்தாசலம் - சேலம் பிரதான புறவழிச்சாலையில், கோ.பொன்னேரி ரவுண்டானாவில் இருந்து 100 மீ., தொலைவில் உள்ள ஏனாதிமேடு பகுதியில், அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. புறவழிச்சாலை என்பதால் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பாதை உள்ளது.
மற்ற பகுதியில் 'சென்டர் மீடியன்' அமைத்து, அதன் நடுவே அரளி செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஏனாதிமேடு அரசு டாஸ்மாக் கடைக்கு சென்று வர ஏதுவாக சென்டர் மீடியனின் ஒரு பகுதியை மர்ம நபர்கள் உடைத்து, இருசக்கர வாகனங்கள் கடக்கும் வகையில் மாற்றினர்.
மது போதையில் இப்பகுதியை கடக்கும் போது, அவ்வழியே அதிவேகமாக செல்லும் வாகனங்களில் மோதி விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
மேலும், மதுப்பிரியர்களால் அப்பாவி மக்களும் விபத்தில் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சென்டர் மீடியனில் சேதப்படுத்தப்பட்ட பகுதியில் செங்கல் வைத்து, சிமென்ட் கலவை மூலம் தடுப்பு ஏற்படுத்தப் பட்டது.
தற்போது, வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

