/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சோழர்கால துர்கை சிற்பம் கண்டெடுப்பு
/
சோழர்கால துர்கை சிற்பம் கண்டெடுப்பு
ADDED : டிச 28, 2025 06:12 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காவனுார் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பரப்பு களஆய்வு செய்தார். அப்போது சுடுமண்ணாலான சோழர்காலத்தை சேர்ந்த விஷ்ணு துர்க்கை சிற்பம் ஒன்றை கண்டெடுத்தார். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது;
சுடுமண் துர்கை சிற்பம் 19.5 செ.மீ உயரம், 15 செ.மீ அகலம் கொண்டது. அழகிய புன்னகையுடன் உள்ள துர்கையின் தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளிலும் காதணியாக குண்டலமும், கழுத்தணியாக சரப்பளி ஆபரணமும் உள்ளன. கைகளில் பூரிமத்துடன் கூடிய தோள் வளையும், மூன்று கரங்களில் வளையல்களும் அணிந்துள்ளார்.
இடையில் அரையாடை அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளது. அதுமட்டுமின்றி இடையின் முன்புறத்தில் சிங்கமுகம். நின்ற நிலையில் உள்ள துர்கையின் இரு கால்கள் மற்றும் வலது புறத்தில் ஒரு கை உடைந்த நிலையில் உள்ளது.
இச்சுடுமண் சிற்பம் சோழர்கால கலைத்தன்மையினை மிக துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது என கூறினார்.

