ADDED : மார் 12, 2024 05:20 AM

நெய்வேலி : நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய நான்கு பேரை டவுன்ஷிப் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
டவுன்ஷிப் வட்டம் 5 ல் உள்ள தைலம் தோப்பு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த 4 பேர் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
அவர்களை விரட்டி பிடித்த போலீசார் நடத்திய விசாரணையில் நெய்வேலி வட்டம்3 ஐ சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அகிலன் 24, வட்டம் 24 ஐ சேர்ந்த முத்துசாமி மகன் பவித்ரன் 18, வடக்கு மேலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அறிவழகன் மகன் நீலகண்டன் 26, வடக்கு தெரு காலனியை சேர்ந்த வீரப்பன் மகன் எலி என்கிற சந்துரு. 20. என்பது தெரிய வந்தது.
மேலும், அவர்கள் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் என்.எல்.சி., பணியாளர்களின் வீடுகளில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நால்வரையும் கைது செய்த டவுன்ஷிப் போலீசார் அவர்களிடம் இருந்த பட்டாக்கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
