/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
4 வழிச்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
/
4 வழிச்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
4 வழிச்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
4 வழிச்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
ADDED : மே 15, 2025 11:46 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் புறவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றிட, மணிமுக்தாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு வரை (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்பின், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து வேளாண் அறிவியல் நிலையம் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 37 கோடி ரூபாயில் சர்வீஸ் சாலையுடன், புதிதாக மேம்பாலம் கட்டி, திறக்கப்பட்டது.
தொடர்ந்து, மேம்பாலத்தில் இருந்து வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும், விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையை 67 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கியது.
இதற்காக மின் கம்பங்கள் இடமாற்றம், மழைநீர் வடிகாலுடன் சாலையை விரிவாக்கம் செய்து, மணிமுக்தாற்றில் கூடுதலாக ஒரு மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
இதனை, நவீன டெக்னாலஜி முறையில், ஆற்றில் பில்லர்கள் மட்டும் கட்டி, அதன் மேல்தளங்கள் (ஸ்பேன்கள்), அழுத்தம் முறையில், ஸ்டெரிங் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. 30.5 மீட்டர் நீளத்தில், 60 டன் எடையுடைய மேல்தளம், இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் பொறுத்தப்பட்டது.
தற்போது, 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், பாலத்தில் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் சாலையுடன் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வரும் ஜூன் மாத இறுதியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் எளிதில் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.