மாடு திருடியவர் கைது
விருத்தாசலம் அடுத்த டி.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன், 60. இவருக்கு சொந்தமான வயலில் ஆடு, மாடுகளை பராமரித்து வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு, இவரது 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பசு மாட்டை காணவில்லை. புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது, கச்சிராயநத்தம் ரத்தினவேல் மகன் பிரபாகரன், 22, என்பவர் பசு மாட்டை திருடியது தெரியவந்து, அவரை கைது செய்தனர்.
எலக்ட்ரிஷியன் தற்கொலை
காட்டுமன்னார்கோவில் அடுத்த நடுகஞ்சங்கொல்லையை சேர்ந்தவர் சூரியநாராயணன், 45; எலக்ட்ரிஷியன். இவரது மனைவி பிரபா 39; இவர்களுக்கு பிரேம்நாத் 24; ஹரிஷ் 19 இரு மகன்கள் உள்ளனர். காட்டுமன்னார்கோவில் சந்தைத்தோப்பில் வாடகை வீட்டில் குடியிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மனைவி பிரபா தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு ஏன் வருகிறீர்கள் என தட்டிக்கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சூரியநாராயணன், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
டாஸ்மாக் மது விற்றவர் கைது
புவனகிரி போலீசார் நேற்று முன் தினம் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது லிங்க பைரவி நகர் ஆர்ச் அருகில் ஸ்கூட்டியில் மறைத்து வைத்து பிராந்திபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. கீழ்புவனகிரி கிழக்கு யாதவ் தெருவைச் சேர்ந்த விஜயன்,39; என்பவரை கைது செய்து ஸ்கூட்டியுடன், 20 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அவரது மாமியார் மஞ்சுளாவை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண் மீது தாக்குதல்
குள்ளஞ்சாவடி அடுத்த தங்களிக்குப்பத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி, கோமதி, 38. இவரது குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பாலமுருகன் குடும்பத்திற்கும் இடையே மனை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் பாலமுருகன் குடும்பத்தினர் வேலி அமைத்ததை கோமதி தடுத்துள்ளார். இதனால் ஏற்பட்டதகராறில், கோமதியை இரும்பு பைப்பால் தாக்கி, வீட்டினுள் நுழைந்து டி.வி, உள்ளிட்ட பொருட்களை பாலமுருகன் சேதப்படுத்தியுள்ளார். புகாரின்பேரில், பாலமுருகன், 35, செல்வி, சுரேந்திரன், திருமுருகன் ஆகிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.