/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி அருகே வண்டல் மண் சுரண்டியதால் அபாயம்
/
பள்ளி அருகே வண்டல் மண் சுரண்டியதால் அபாயம்
ADDED : நவ 13, 2024 06:22 AM

விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி ஊராட்சியில் பெரிய ஏரி, சின்ன ஏரிகள் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் சுற்றியுள்ள கிராம மக்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றனர்.
கால்நடைகளின் குடிநீர் தேவை பூர்த்தியாகி வந்தது.
இந்நிலையில், வண்டல் மண் அள்ளும் பணிக்காக ஏரிகளில் அளவுக்கு அதிகமாக ஆங்காங்கே மினி குளங்களை போல தாறுமாறாக மண் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏரிகளுக்கு செல்லும் வாய்க்கால்களின் கரைகளை சீரமைப்பதாக கூறி பல அடி ஆழமாக மண் எடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை சுற்றியும் மண் அள்ளப்பட்டுள்ளது. ஆங்காங்கே மினி குளங்களாக உருவாகியுள்ளதால் மழை காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரின் ஆழம் தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம், மங்கலம்பேட்டை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விதிமீறலாக மண் அள்ளியது குறித்து 'தினமலர்' நாளிதழில் பலமுறை செய்தி வெளியிட்டும் அதிகாரிகள் அலட்சியத்தால் இயற்கை வளம் சுரண்டப்படுவது அதிகரித்து வருகிறது.
ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் மண் அள்ளப்படுவதால் அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.