/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கைவிடப்பட்ட இல்லம் தேடி கல்வி; தன்னார்வலர்கள் மாற்றுப்பணி வழங்க கோரிக்கை
/
கைவிடப்பட்ட இல்லம் தேடி கல்வி; தன்னார்வலர்கள் மாற்றுப்பணி வழங்க கோரிக்கை
கைவிடப்பட்ட இல்லம் தேடி கல்வி; தன்னார்வலர்கள் மாற்றுப்பணி வழங்க கோரிக்கை
கைவிடப்பட்ட இல்லம் தேடி கல்வி; தன்னார்வலர்கள் மாற்றுப்பணி வழங்க கோரிக்கை
ADDED : செப் 17, 2025 12:24 AM
கடலுார்; தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது, அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மாலை நேரங்களில் இல்லம் தேடிக்கல்வி மையங்களில் தன்னார்வலர்கள் கற்பித்தல் சேவையை மேற்கொண்டனர். 2021ல் ஒரு லட்சம் தன்னார்வலர்களுடன் துவங்கி படிப்படியாக இரண்டு லட்சம் தன்னார்வலர்கள் இணைந்தனர்.
தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த தன்னார்வலர்கள் கடந்த ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 50 ஆயிரத்திற்கும் குறைவான தன்னார்வலர்களே பணியில் உள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் வேலை பார்த்த 7000 பேரில், தற்போது 2000 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்த தன்னார்வலர்களுக்கு ஒரே ஒரு சான்றிதழை கொடுத்து, அரசு தனது கடமையை முடித்துக்கொண்டது.
தற்போது தொடர்ந்து பணிபுரியும் தன்னார்வலர்களும் அதே 1000 ரூபாய் சம்பளத்திலேயே பணியில் உள்ளனர்.
இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்பாடு தடைபடக்கூடாது என்பதற்காக ஆசிரியர் பயிற்சி, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் படித்த 2 லட்சம் தன்னர் வலர்கள் பணிபுரிந்தனர்.
நான்கு ஆண்டுகளுக்குப்பின் அதில் மூன்றில் ஒரு பங்கு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 50 ஆயிரத்திற்கும் குறைவானர்களே பணிபுரிகின்றனர். ஏற்கனவே பணிபுரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, மாற்றுப்பணி எதுவுமே வழங்கப்படவில்லை.
தற்போது பணிபுரிபவர்களும் அதே 1000 ரூபாய்க்கே பணிபுரியும் அவல நிலை உள்ளது. இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தை அரசு வழங்க வேண்டும்' என்கின்றனர்.