ADDED : ஏப் 22, 2025 06:45 AM
கடலுார்; கடலுார் ஒன்றியத்தில் கத்தரிக்காய் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. இப்பகுதியில் காய்கறிப் பயிர்கள் பிரதான பயிராக உள்ளன. நிலத்தடி நீர் கிடைப்பதாலும், கரிசல் மண் என்பதாலும் கத்தரிக் காய் நன்கு விளைச்சல் தரக்கூடியது.
அத்துடன் 8 மாதத்திற்கு தொடர்ந்து காய்ப்பு கிடைக்கும். இந்தாண்டு நாணமேடு, கண்டக்காடு, உச்சிமேடு, கங்கணாங்குப்பம், ரெட்டிச்சாவடி, மேல் அழிஞ்சிப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் காத்தரிச்செடி நடவு செய்தவர்களுக்கு கோடை மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில், 20 சதவீத செடிகள் அழிந்து விட்டது.
அதிலிருந்து தப்பிய செடி காய்க்க துவங்கியதில் இருந்து விலை வீழ்ச்சி அடைந்தது. கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட மிக குறைவான விலைக்கு விற்பனைக்கு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் களை எடுத்தல், உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், அறுவடை கூலி ஆகியவற்றை கணக்கிடும்போது, கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது.
அதனால் சிறிய நிலப்பரப்பில் தாமாகவே விவசாய தொழில் செய்பவர்கள் மட்டும் கத்தரிச் செடியை பராமரித்து வருகின்றனர். மற்றவர்கள் உயிருடன் உள்ள செடியை தண்ணீர் பாய்ச்சாமல் காயவிட்டு, பின்னர் ஏர் ஓட்டி நெல் நடவு செய்து வருகின்றனர்.