ADDED : மார் 19, 2024 06:00 AM
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு எதிராக தேர்தல் களப்பணியாற்ற, பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், லோக்சபா தேர்தலையொட்டி, சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதி மண்டல தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிதம்பரம் மேல வீதியில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் மருதை தலைமை தாங்கினார், நகர பொதுச்செயலாளர் குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அருள், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், மைசூர் ரயிலை கடலூர் வரை நீட்டிப்பு செய்த மத்திய ரயில்வேதுறை அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, கடந்த 5 ஆண்டுகளாக சிதம்பரம் தொகுதி எம்.பி., திருமாவளவன் தொகுதி பக்கம் தலைகாட்டவில்லை.
அவருக்கு அலுவலகம் கூட இங்கு இல்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து பேசவில்லை.
எனவே, அவரை எதிர்த்து தேர்தல் களப்பணியாற்றுவது, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் வேட்பாளரை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
