பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்:நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும்
பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்:நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும்
UPDATED : ஆக 28, 2026 09:16 PM
ADDED : ஆக 28, 2026 09:13 PM
கடலுார்:
பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்தோடு, உயர்ந்துள்ள வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும் என குறைகேட்பு கூட்டத்த்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கடலுாரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;
குஞ்சிதபாதம்: தமிழக அரசு, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 10 மடங்கு உயர்த்தியுள்ளதால், பத்திரப்பதிவு செலவு கூடுதலாகிறது. அதனால், வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும். புவனகிரி தாலுகா ஆதிவராக நல்லுாரில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் இன்ஸ்சூரன்சால் எந்த பயனும் இல்லை. மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக வருவதை ஏன் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்தால் தான் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஆகவே பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும். உடன் அனைத்து விவசாயிகளும் எழுந்து, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினர்.
ரவிந்திரன்: சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்கிறது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக பூமியில் விரிசல் ஏற்படுவதால் சத்தம் கேட்பதாக கூறுகின்றனர். இதுபற்றி விளக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை, பல தலைமுறைகளாக விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலங்கள் தற்போது அறநிலைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதற்கு ஆண்டிற்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் குத்தை நிர்ணயித்து, ஆண்டுதோறும் ஏலம் விடும் நடைமுறை தற்போது அறிவித்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது முற்றிலும் கோவில் நிலை சாகுபடியாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும். ஒருபோக சாகுபடி செய்யும் கோவில் நிலங்கள் ஆண்டு குத்ததை ரூ.10 ஆயிரம் என்பது ஏற்புடையதல்ல.
கலெக்டர்: வெடி சத்தம் குறித்து ஆய்வு செய்யப்படும்.
முருகானந்தம்: குண்டுபண்டிதன் ஓடை மற்றும் பெரியவாய்க்காலை துார்வார வேண்டும். தனியார் வங்கிகள் பயிர் காப்பீடு தொகையை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. அரசே காப்பீடு நிறுவனத்தை தொடங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை துாக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் காப்பீடு செய்து தர வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தடுப்பணை கட்ட விதித்துள்ள விதிகளை நீர்வளத்துறை தளர்த்த வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரி: ஓடை, வாய்க்கால்களை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் காப்பீட்டுத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
கலெக்டர்: இது பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
கலியபெருமாள்: மணிமுக்தாற்றில் கழிவுகளை கொட்டுவதை தடுத்து, தடுப்பணை கட்டினால், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். முந்திரி கொட்டையை தனியாக பிரிக்க எந்திரம் வழங்க வேண்டும்.
மாதவன்: குறுவை சாகுபடி நடைபெறும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். புதுச்சேரி பகுதிகளில் தமிழக விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதில்லை. மீறி கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று புதுச்சேரி வேளாண் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதேபோல் தமிழக மக்களுக்கு மது விற்கக்கூடாது என்று அரசு அறிவிக்குமா? தரமான மக்காச்சோள விதைகளை வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என விவாதங்கள் நடந்தது.
