/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டனில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் பாய்ச்சல்
/
வெலிங்டனில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் பாய்ச்சல்
வெலிங்டனில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் பாய்ச்சல்
வெலிங்டனில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் பாய்ச்சல்
ADDED : டிச 12, 2024 07:56 AM

திட்டக்குடி; கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீர்தேக்கத்தில் தற்போது 23.40 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம், வெலிங்டன் நீர்தேக்க உதவிபொறியாளர் அலுவலகத்தில் நேற்று பகல் 11:00 மணியளவில் நடந்தது.
விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர் எத்திராஜூலு தலைமை தாங்கினார். உதவி பொறியாளர்கள் சுதர்சன், செந்தில்நாதன், பாஸ்கரன், வேளாண்மை துறை கீர்த்தனா முன்னிலை வகித்தனர். பாசன சங்க விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
அதில், வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்களை முறையாக துார் வாரவில்லை. இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து கடைமடைக்கு தண்ணீர் செல்லாது, அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் பாதிப்பு இல்லாமல் தண்ணீர் பகிர்ந்து வழங்க வேண்டும்.
வாய்க்கால்களை துார்வாராமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூட்ட முடிவில், வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக 120 நாட்களுக்கு 120 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது.