ADDED : மார் 14, 2026 05:27 AM

மந்தாரக்குப்பம்: வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தில் அளவீடு செய்து தரக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட, 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
என்.எல்.சி., முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக வடக்குவெள்ளூர் தொல்காப்பியர் பகுதியில் வசித்து வந்த 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் கையகப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடமாக புதிய பஸ் நிலையம் அருகில் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
அவரவருக்கு உரிய இடத்தை அளவீடு செய்து தராமல் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் வீடு கட்டி குடியேற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் பட்டா வழங்கிய இடத்தில் கடந்த பிப்., 23 ம் தேதி குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் குடியேறி, 18 நாட்களாகியும் வருவாய் துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலை மந்தாரக்குப்பம் புதிய பஸ்நிலையம் முன்பு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற மந்தாரக்குப்பம் போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட, 41 பெண்கள்,19 ஆண்கள் உட்பட, 60பேரை போலீசார் கைது செய்தனர்.
