அடிப்படை வசதிகளை செய்து தருவேன் : பிரேமலதா திட்டவட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தருவேன் : பிரேமலதா திட்டவட்டம்
ADDED : ஜூன் 29, 2026 03:58 AM
விருத்தாசலம்: தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை முழமையாக செய்து தருவேன் என பிரேமலதா எம்.எல்.ஏ., பேசினார்.
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது.
முகாமை துவக்கி வைத்து பிரேமலதா எம்.எல்.ஏ., பேசுகையில், 'விருத்தாசலம் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பீங்கான் தொழிற்சாலை கல்லுாரியை மேம்படுத்த வேண்டும்.
2 ஆயிரம் ஆண்டு பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும். விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டசபையில் பேசியுள்ளேன். மேலும், இதுசம்பந்தமாக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளேன்.
விருத்தாசலம் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய, கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிப்பேன். விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவேன்' என பேசினார்.
அதைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
அதன்பின், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து, அவர்கள் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
