குறுவை பட்டத்தில் 3,712 எக்டேர் நெற்பயிர் காப்பீடு: மாவட்டத்தில் 2,696 விவசாயிகள் பதிவு
குறுவை பட்டத்தில் 3,712 எக்டேர் நெற்பயிர் காப்பீடு: மாவட்டத்தில் 2,696 விவசாயிகள் பதிவு
UPDATED : ஆக 20, 2026 04:46 PM
ADDED : ஆக 20, 2026 04:45 PM

கடலுார்: மாவட்டத்தில் குறுவை, வேர்க்கடலை, எள், கம்பு பயிருக்கு 2,696 விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ளனர்.
விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட கடலுார் மாவட்டத்தில் நெல், எள், மக்காச்சோளம், கரும்பு, கம்பு, வேர்க்கடலை, உளுந்து என, 10க்கும் மேற்பட்ட பயிர்களுக்கு பிரதம மந்திர காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பயிர்களை காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு உத்திரவாத மகசூலை விட சராசரி மகசூல் குறைவாக கிடைக்கும் போது, இழப்பீடு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் நடப்பாண்டு காரீப் பருவத்தில் 40 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தென்மேற்கு பருவ மழை பொழிவு சராசரிக்கும் கீழ் இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் குறுவை சாகுபடி பரப்பை உடனடியாக பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலமாக, மகசூல் இழப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் விதமாக உரிய இழப்பு தொகை பெற ஏதுவாக இருக்கும்.
எனவே, விவசாயிகள் பயிர் கடன் பெறும் கூட்டுறவு அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் குறுவை சாகுபடி பரப்பை பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 31ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேளாண் துறை அறிவுருத்தியது.
அதன்பேரில், அண்ணாகிராமம் வட்டாரத்தில் -64 விவசாயிகள், கடலுார்-42, கம்மாபுரம் 25, காட்டுமன்னார்கோவில் 322, கீரப்பாளையம் 331, குமராட்சி 1027, குறிஞ்சிப்பாடி 51, மங்களூர் 34, மேல் புவனகிரி 293, நல்லுார் 33, பண்ருட்டி 74, பரங்கிப்பேட்டை 113, ஸ்ரீமுஷ்ணம் 134, விருத்தாசலம் 70 என, மாவட்டம் முழுவதும் பயிர்க்கடன் பெற்ற மற்றும் பயிர்க்கடன் பெறாத 2,613 விவசாயிகள் 3,712.992 எக்டரில் குறுவை நெல் பயிரை காப்பீடு செய்துள்ளனர்.
இதேபோன்று, வேர்க்கடலை, எள், கம்பு உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடந்த 17 ம் தேதிவரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கம்மாபுரம், விருத்தாசலத்தில் 78 விவசாயிகள் 58.95 எக்டரில் வேர்க்கடலை பயிருக்கும், நல்லுாரில் 1 விவசாயி 2.7 எக்டரில் எள் பயிருக்கும், விருத்தாசலத்தில் 4 விவசாயிகள் 6.31 எக்டரில் கம்பு பயிருக்கும் காப்பீடு செய்துள்ளனர். இதன் மூலமாக மாவட்டத்தில், குறுவை நெல் மற்றும் வேர்க்கடலை, எள், கம்பு உள்ளிட்ட பயிர்களுக்கு மொத்தம் 2,696 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
