ADDED : நவ 04, 2024 05:46 AM

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் புத்திரன்குப்பம்-கீழ்மாம்பட்டு சாலை ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் புத்திரன்குப்பத்திலிருந்து கீழ்மாம்பட்டு செல்லும் 3 கிலோ மீட்டர் இணைப்பு தார் சாலை உள்ளது. சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு சாலை வழியாக புதுப்பாளையம், கீழ்மாம்பட்டு, காடாம்புலியூர், நெய்வேலி ஆகிய பகுதிகளுக்கு சென்றால் துாரம் குறைவு என்பதால் இந்த வழியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வண்டி பஞ்சராகி அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் விளை நிலம் வைத்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கு இடுபொருட்களை எடுத்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆகையால் பண்ருட்டி ஒன்றிய அதிகாரிகள் இந்த தார் சாலையை சரி செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.