/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள்; கடலுார் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
/
கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள்; கடலுார் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள்; கடலுார் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள்; கடலுார் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ADDED : அக் 08, 2025 06:57 AM

கடலுார்; கடலுார் அருகே, தேர்தல் முன்விரோதத்தில் நடந்த கொலை வழக்கில், 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார், துாக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு கடந்த 2019ல் நடந்த ஊராட்சி தலைவர் தேர்தலில் ராமச்சந்திரன், ரவி போட்டியிட்டனர். அதில், ரவி தோல்வியடைந்தார். இதனால் ராமச்சந்திரன் மற்றும் ரவி ஆதரவார்களிடையே மோதல் ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்., 14ம் தேதி, ராமச்சந்திரன் ஆதரவாளரான ஜனார்த்தனன், அவரது தம்பி கமலக்கண்ணன் ஆகியோர் அதே பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ரவி ஆதரவாளரான உலகநாதன் தரப்பினர் வந்ததால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.
இதில், ஜனார்த்தனன், கமலக்கண்ணன் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்து, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்ட கமலக்கண்ணன் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார், பள்ளிப்பட்டு ஊராட்சியை சேர்ந்த குமார், 48; வெங்கடேசன், 32; மணியரசன், 29; கிருஷ்ணராஜ், 52; சிலம்பரசன், 28; வினோத், 28; பாரதிதாசன், 28; அரவிந்த், 30; சிவராமன்,47; பரத்ராஜ்,30; ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கு கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, சிவராமன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பு கூறினார்.
இதில், குமார், வெங்கடேசன், மணியரசன், கிருஷ்ணராஜ், சிலம்பரசன், வினோத், பாரதிதாசன், அரவிந்த், பரத்ராஜ் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜரானார்.