ADDED : அக் 08, 2024 02:35 AM
சமூக பணியாளருக்கு விருது
தமிழக ஆறுகள் வளமீட்பு இயக்கம் சார்பில் சமூக பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது. இதில், விவசாயிகள் நலன், நீர் நிலைகள் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கு பணியாற்றிய நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த அன்னை தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்ட விவசாய சங்க தலைவர் சேகருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை இந்தியாவின் தண்ணீர் மனிதர் என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் வழங்கி பாராட்டினார்.
குடிநீர் தொட்டி கட்டும் பணி
விஜயமாநகரம் கிராமத்தில், பொதுமக்கள் நலன் கருதி என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாயில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணக்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
பொது மேலாளர் பரந்தாமன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், காங்., வட்டார தலைவர் ராவணன், நகர தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ரஞ்சித்குமார் தொகுதி தலைவர் செந்தில் உடனிருந்தனர்.
பிரம்மோற்சவ விழா
பண்ருட்டி அடுத்த அக்கடவல்லியில் ஸ்ரீலட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.
நேற்று 7ம் தேதி இரவு உற்சவர் ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 10ம் தேதி மாலை உற்சவர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம், 12ம் தேதி காலை 7:30 மணிக்கு கட்டுத்தேர் வீதியுலா நடக்கிறது.
பொதுக்குழு கூட்டம்
நெய்வேலி எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் நடந்த முகவர்கள் பொதுக்குழுக் கூட்டத்திற்கு, அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். கோட்ட சங்க பொருளாளர் தாண்டவகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய கிளை சங்கத் தலைவராக அரவிந்த், செயலாளராக சந்தானம், பொருளாளராக முரளிதரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதன்மை ஆலோசகர் சங்க தலைவர் வீரமணி, துணைத் தலைவர்கள் பாபு, மதிவாணன், துணைச் செயலாளர்கள் மைக்கேல் ராயப்பன், ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலங்கலான குடிநீர்: மக்கள் மனு
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் குமராட்சி அடுத்த சாலியந்தோப்பு ஊராட்சி தலைவர் உமாதேவி தலைமையில் கிராம மக்கள் கலங்கலான குடிநீர் அடங்கிய பாட்டிலுடன் வந்து அளித்துள்ள மனு: எங்கள் ஊராட்சி பகுதியில் ஆழ்துளை கிணறு மூலமாக வழங்கப்படும் குடிநீர் கலங்கலாக வருகிறது. இதனால் கடவாச்சேரி ஊராட்சிக்கு நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் லால்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்கத் தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் பொன்னம்பலம் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், 2023 - 2024ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செலுத்தி பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். கடை மடை பானத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
