/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கோர்ட்டில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்
/
கடலுார் கோர்ட்டில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்
ADDED : அக் 14, 2025 07:38 AM
கடலுார்; கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த நெய்வாசல் வெ ள்ளாற்றில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அரசு மணல் குவாரி இயங்கியது. அதில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு அப்போதைய குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமை தாங்கினார். போராட்டம் திடீரென கலவரமானது. பாதுகாப்பு பணியில் இருந்த 9 போலீசார் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்தனர். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார், அமைச்சர் சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
இவ்வழக்கு, எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் வழக்கை விசாரிக்கும் கடலுார் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திராதேவி, விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வரும் 16ம் தேதி முதல், 19ம் தேதி வரை, தினசரி இயக்கப்படும் பஸ்களை விட, கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்ட வாரியாக இணை போக்குவரத்து ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு சிவசங்கர் கூறினார்.