ADDED : ஏப் 01, 2026 06:49 PM

கடலுார்: கடலுாரில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார், கூத்தப்பாக்கம் பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று முன்தினம் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று காவடி பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவடி எடுத்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இன்று (2ம் தேதி) 108 சங்காபிஷேகம் மற்றும் சுவாமி வீதியுலா, நாளை 3ம் தேதி இரவு 8 மணிக்கு இடும்பன் பூஜை, 4ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
கடலுார் நவநீதம் நகர் சிவசுப்பிரமணியர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடலுார் துறைமுகம் கொடிக்கால்குப்பம் சிவசுப்பிரமணிய சுவாமி, புதுக்குப்பம் பாலமுருகன், புருகீஸ்பேட்டை சுப்பிரமணிய சுவாமி உட்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
