/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அவதி
/
சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அவதி
ADDED : அக் 18, 2024 06:44 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான இடவசதியின்றி நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம், பாலுார், விலங்கல்பட்டு, வானமாதேவி, பத்திரக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு, 24 மணி நேரம் பிரசவம் பார்த்தல், சித்த மருத்துவம், பொது மருத்துவம், கண், பல் சிகிச்சை, எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை போன்ற பிரிவுகள் செயல்படுகிறது. இதனால் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர்.
சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்ததால், அருகே உள்ள பிரசவம் பார்க்கும் வார்டில் மருத்துவமனை முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், ஆண்கள், பெண்கள்,வயது முதிர்வு நோயாளிகள் இடநெருக்கடியால் அவதியடைந்து வருகின்றனர். போதுமான டாக்டர்களும் இல்லாததாலும், நோயாளிகள் பாதிக்கின்றனர்.
எனவே, சுகாதார நிலையத்தில் புதிய கட்டடம் கட்டவும், கட்டி முடிக்கப்பட்ட சித்த மருத்துவ கட்டடத்தை உடனடியாக திறக்கவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.