/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திட்டக்குடியில் மக்கள் அவதி
/
கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திட்டக்குடியில் மக்கள் அவதி
கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திட்டக்குடியில் மக்கள் அவதி
கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திட்டக்குடியில் மக்கள் அவதி
ADDED : அக் 19, 2024 11:56 PM

திட்டக்குடி : திட்டக்குடியில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவில் தண்ணீர் சாலையில் ஓடியதால் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நெய்வேலி இரண்டாம் சுரங்கத்திலிருந்து, கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வரும் 20 ஆண்டுகளுக்கு, என்.எல்.சி., நிறுவனம், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தண்ணீர் வழங்குகிறது. இத்திட்டத்திற்காக ரூ.479 கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், நீர் உந்து நிலையங்கள் மற்றும் விநியோக வசதிகள் போன்றவற்றை அமைத்து வருகிறது.
இதன் மூலம், கங்கைகொண்டான், குறிஞ்சிப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை 4 பேரூராட்சிகள், வடலுார், திட்டக்குடி 2 நகராட்சிகள் மற்றும் விருத்தாசலம், நல்லுார், மங்களூர் 3 ஒன்றியங்களில் உள்ள 625 கிராமங்களில் வசிப்போர்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் இதர பணிகள் முழு வேகத்தில் நடக்கும் நிலையில், 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. குழாய்கள் மூலம் சோதனை அடிப்படையில் தண்ணீர் இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படுவதால் பல இடங்களில் குழாய் உடைந்து பொது மக்களுக்கு இடையூறாக தண்ணீர் சாலை, தெருக்களில் வெளியேறுகிறது. இதனை கூட்டுக்குடிநீர் திட்ட ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.
திட்டக்குடி பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவில் தண்ணீர் சாலையில் ஓடியது. இதனால் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகள், பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல முடியாமல் அவதியடைந்தனர். பின்னர் தண்ணீர் நிறுத்தப்பட்டு, நேற்று காலை குழாய் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.