ADDED : மார் 13, 2026 06:43 AM

கடலுார்: மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்கிய இடத்தை அளந்து தரக்கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கடலுார் அடுத்த மாவடிப்பாளையம் கிராமத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கிய இடத்தை அதிகாரிகள் அளந்து தரவில்லை.
இதற்காக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது விரைவில் அளந்து சமப்படுத்தி தருகிறோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால் இதுவரையில் இடத்தை அளந்து, சமப்படுத்தி தராதததால் நேற்று கடலுார் ஆர்.டி.ஓ.,அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, 'கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக பட்டா வழங்க தயார் செய்யப்பட்டுள்ளது. பட்டா வழங்கிய ஒருவாரத்திற்குள் இடத்தை அளந்து, சீரமைத்து தருவோம்,' என்றனர்.
இதனால் அதிருப்தியடைந்த மாற்றுத்திறனாளிகள், 'முறையான பட்டா வழங்கும் வரை போராட்டத்தை தொடருவோம்' எனக்கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அடுப்பு அமைத்து சமைத்து சாப்பிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து மதியம் கலைந்து சென்றனர்.
