சொத்து ஆவணம் மாயமான புகாரா தலைதெறிக்க ஒடும் போலீசார்
சொத்து ஆவணம் மாயமான புகாரா தலைதெறிக்க ஒடும் போலீசார்
UPDATED : மே 26, 2026 10:05 PM
ADDED : மே 26, 2026 04:31 PM
நமது நிருபர்:
வீட்டு பத்திரம், சொத்து ஆவணங்கள் காணாமல் போனதற்கு புகார் அளிக்க போலீஸ் நிலையத்திற்கு, பயனாளிகள் சென்றால் போலீசார் தலைதெறிக்க ஓடுகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் சொத்து ஆவணங்கள் தொலைந்ததாக வழக்கு பதிவு செய்து, அதற்கான தகவல் அளிப்பதற்கு போலீசார் அச்சத்தில் உள்ளனர்.
சிதம்பரம் போலீஸ் சரகத்தில் மலையின் பெயரில் முடியும் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பல்வேறு மாவட்டங்களில் தொலைத்த, பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை , மலை பெயரில் முடியும் ஸ்டேஷன் எல்லை மற்றும் புவனகிரி மற்றும் வள்ளலார் அவதரித்த ஊரில் உள்ள ஸ்டேஷன் எல்லையில் தொலைந்ததாக வழக்குப் பதிந்து பல லகரங்கள் கைமாறிய பின் சான்றிதழ் வழங்கியதாக புகார் வந்தது.
உயர் அதிகாரிகளின் விசாரணையில் உறுதியானதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து முறையான விசாரணை நடத்திய பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மீறி முறைகேடு நடந்தது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையான உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இதனால் போலீசார் முறைப்படி விசாரணை செய்து குறிப்பிட்ட ஆவணங்கள் கேட்டால், பொதுமக்களோ அலைகழிக்க விடுவதாக எங்கள் மீது விரக்தியடைகின்றனர் என்றார். இதனால் இணையதளம் மூலம் புகார் அளித்தாலும் போலீசார் விசாாரிக்க, அச்சமடைந்து தலை தெரிக்க ஓடுகின்றனர்.
