/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதாள சாக்கடை திட்டம் மக்கள் கோரிக்கை
/
பாதாள சாக்கடை திட்டம் மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 18, 2026 05:27 AM
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில், பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள, 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அதிகளவு சாதாரண மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. சில ஆண்டுகளாக பேரூராட்சியின் எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் தொகையும் அதிகரித்து வருகின்றன. இதனால் பேரூராட்சி வார்டுகளில் உள்ள வடிகால் வசதிகள் போதுமானதாக இல்லை.
மழை காலங்களில் பல இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் முறையாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. பல வார்டுகளில் கழிவநீர் வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டு துார்ந்துள்ளதால் மழை காலங்களில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடும் அவல நிலை தொடர்கிறது.
அதனால், பெண்ணாடம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும் என வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

