UPDATED : ஜூலை 07, 2026 05:56 PM
ADDED : ஜூலை 07, 2026 05:40 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், மின் நிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
விருத்தாசலம் நகராட்சி பெரியார் நகர் தெற்கு, வடக்கு பகுதிகளில் எம்.எல்.ஏ., அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தீயணைப்பு நிலையம், தனியார் பள்ளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக இப்பகுதியில் மின்வெட்டு ஏற்படுகிறது. காலை, மதிய வேளைகளில் முன்அறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படும்போது குழந்தைகள், முதியோர் துாக்கமின்றி கொசுக்கடியில் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக மின் ஊழியர்களிடம் கேட்டாலும், நெய்வேலி மெயின் லைனில் பழுது அல்லது துணை மின் நிலையத்தில் பழுது என காரணம் கூறுவது தொடர்கிறது. சமீப காலமாக தனிப்பட்ட நுகர்வோருக்கு பழுதுநீக்குவதால் மின் நிறுத்தம் செய்வதாக கூறுகின்றனர். இதனால் பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
