திறமை வளர்த்துக் கொண்டால் சிறந்த இன்ஜினியராகலாம்: ரமேஷ் பிரபா
திறமை வளர்த்துக் கொண்டால் சிறந்த இன்ஜினியராகலாம்: ரமேஷ் பிரபா
UPDATED : ஜூன் 14, 2026 04:19 PM
ADDED : ஜூன் 14, 2026 04:10 PM
ரமேஷ் பிரபா,
கல்வி ஆலோசகர்.
-
எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வது,எந்த பாடப்பிரிவில் சேர்வது என்பதை சில வீட்டில் பெற்றோரும், சில வீட்டில் மாணவர்களும் முடிவு செய்கின்றனர். எனவே இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து பெற்றோரும் மாணவர்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்ற தகவல் பரவலாக உள்ளது. ஆனால் திறமை வளர்த்துக் கொண்டால் சிறந்த இன்ஜினியராக உருவாக முடியும். மதிப்பெண் மட்டும் பெற்றால் போதாது வேலை வாய்ப்புக்கான திறமையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 50க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் பாட பிரிவுகள் உள்ளன. ஆனால் நாம் ஒரு சில பாடப்பிரிவுகள் தான் வேண்டுமென பிடிவாதமாக இருப்போம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக இன்ஜினியர்கள் பாடப்பிரிவுகள் கிடையாது. ஏனென்றால் எல்லா பிரிவுகளிலும் ஆண் பெண் பணியாற்றலாம்.
ஆனால் மைன்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் ஆண்கள் அதிக அளவு பணி புரிகின்றனர். இதில் பெண்களுக்கு உடல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதால், அதிகளவில் பெண்கள் பணி புரிவதில்லை. எந்த பாடப்பிரிவில் குறைந்த அளவு மாணவர்கள் இருக்கின்றார்களோ, அந்தப் பாடப்பிரிவில் தான் நமக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு, அதிகமாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்கும்போது, அந்த துறையில் குறைந்த அளவே மாணவர்கள் படித்தனர். ஆனால் அவர் அந்த துறையில் எந்த அளவு உச்சம் பெற்றார் என்பதை, நாம் நன்கு அறிவோம். எனவே எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்கிறோம் என்பது முக்கியமில்லை அதில் நாம் எவ்வளவு திறமையானவராக உள்ளோம் என்பதுதான் முக்கியம்.
உங்கள் பிள்ளைகளை ஹாஸ்டலில் சேர்த்து விடுங்கள். ஏனென்றால் அங்கு தான் அவர்களுக்கு வெளி நபர்களிடம் எப்படி பழக வேண்டும் என தெரியும். மேலும் விட்டுக் கொடுக்கும் பழக்கமும், உதவி செய்யும் மனப்பான்மையும் கிடைக்கும். இது அவர்களுக்கு எதிர்காலத்தில் சொந்த காலில் நிற்பதற்கு உதவும் என்றார்.
