/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் மீது கார் மோதி வாலிபர் பலி உறவினர்கள் ரகளை
/
பைக் மீது கார் மோதி வாலிபர் பலி உறவினர்கள் ரகளை
ADDED : செப் 29, 2024 06:31 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோ.மங்கலம் புதுகாலனியை சேர்ந்தவர் ராசலிங்கம் மகன் அறிவழகன், 23, கூலி தொழிலாளி.
இவர் நேற்று இரவு 8:30 மணியளவில் விருத்தாசலம் - சேலம் சாலை, மணலுார் மேம்பாலத்தில் பைக்கில் சென்றார்.
அப்போது, சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்ற கார் மோதியதில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அப்போது, காரில் இருந்த 5 பேரில் மூவர் தப்பியோடினர். பிடிபட்ட சரண்ராஜ், பிரகாஷ் ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் தாக்கினர்.உடன், போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு,விருத்தாசலம் அரசுமருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
அறிவழகன் உறவினர் மற்றும் கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன் திரண்டனர்.
பின்னர், அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த இருவரையும் தாக்க முயன்றனர். அப்போது, ஆத்திரத்தில் அரசு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.