ADDED : மார் 13, 2026 06:46 AM

சிதம்பரம்: தினமலர் செய்தி எதிரொலியாக, ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் அகற்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகரின் பிரதான வீதிகளாக, மேலவீதி, கீழவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகியவை உள்ளன. இங்கு எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். ஆக்கிரமிப்பாளர்களால், நெருக்கடியும், தொடர்ந்து விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று சிதம்பரம் நகரக்காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் 10 க்கும் மேற்பட்ட போலீசார், சிதம்பரத்தின் நான்கு வீதிகளில், ஆக்கிரமித்து கடை போட்டுள்ள வியாபாரிகளிடம், சாலையை விட்டு நடைபாதை உள்ள இடத்திற்கு கடையை தள்ளி வைக்க வலியுறுத்தினர்.
குறிப்பாக கீழ வீதியில், நடைபாதை வியாபாரிகள் கடைகள் வைக்க அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.
கோவில் சன்னதி பகுதிகளிலும், ஆக்கரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரு தினங்களில், ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

