இரும்பு கம்பிகள் பாழாகும் அவலம் பாதுகாப்பாக வைக்க கோரிக்கை
இரும்பு கம்பிகள் பாழாகும் அவலம் பாதுகாப்பாக வைக்க கோரிக்கை
ADDED : மே 07, 2026 04:27 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில், வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் பாதுகாப்பாக வைக்கப்படாததால், துருப்பிடித்து வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பரங்கிப்பேட்டை, ஊராட்சி ஒன்றியத்தில், 41 ஊராட்சிக்குட்பட்ட, கிராமங்களில் வீடு இல்லாதவர்கள், கூரை வீட்டில் வசிப்பவர்களுக்கு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், கலைஞர் கனவு இல்லம், பி.எம்.ஜென்மன் திட்டம், முதல்வரின் வீடு மறு சீரமைப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வீடு கட்ட, அரசு மூலம் இரும்பு கம்பிகள், சிமெண்ட் மூட்டைகள் வழங்கப்படுகின்றன.
இரும்பு கம்பிகள், சிமெண்ட் மூட்டை மூலம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இரும்பு கம்பிகள் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பாதுகாப்பாக வைக்கப்படாமல், அலுவலக வளாக பொது வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது, வெயில், மழையால், இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வருகின்றன. துருப்பிடித்த கம்பிகளை கொண்டு வீடு கட்டினால், வீடுகள் தரம் இல்லாமல் போகும் நிலை உள்ளது. அதனால், வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகளை பாதுகாப்பாக வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
