/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 10, 2025 06:31 AM

கடலுார்: கடலுார் டவுன் ஹாலில் நெடுஞ்சாலைத் துறை, வட்டார போக்குவரத்து துறை, கடலுார் மண்டல போக்குவரத்துக் கழகம் இணைந்து சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பின், அவர் கூறுகையில், கடந்த 1ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
ஊர்வலத்தில், சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு, பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவோம். விலையில்லா உயிரை விபத்தின் மூலம் இழப்பதை தடுப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் சிவக்குமார், சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளர் ஸ்ரீகாந்த், வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், அரசு போக்குவரத்துக்கழக கடலுார் மண்டல பொது மேலாளர் ராகவன், துணை மேலாளர் ஸ்ரீராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஹெல்மெட் வழங்கி அபராதம்
கடலுார் டவுன் ஹால் அருகே சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். அப்போது, சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இதைக்கண்ட கலெக்டர், வாகன ஓட்டிகளை அழைத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். அதே சமயத்தில், அவர்களுக்கு வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அபராதம் விதித்தார். ஒரே நேரத்தில் இலவசமாக ெஹல்மெட் வழங்கியும், அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.