மீன் வாங்க ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ. 90 ஆயிரம் பறிமுதல்
மீன் வாங்க ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ. 90 ஆயிரம் பறிமுதல்
ADDED : ஏப் 11, 2026 10:15 PM
திட்டக்குடி:திட்டக்குடி அருகே மீன் வாங்க ஆவணமின்றி எடுத்துச் சென்ற ஆந்திரா நபரிடம் ரூ. 90 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திட்டக்குடி (தனி) தொகுதிக்குட்பட்ட, கடலுார் - சேலம் நெடுஞ்சாலையில் சிறுபாக்கம் சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு அலுவலர் இளங்கோவன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் சேலத்தில் இருந்து கடலுார் நோக்கி வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், ஆந்திர மாநிலம், ஓங்கோல் தாலுகா, அன்னங்கி கிராமத்தைச் சேர்ந்த தண்ணீறு சுரேஷ், மீன் வாங்கி, விற்கும் ஏஜன்ட். கடலுாரில் உள்ள மீன் வியாபாரிக்கு கொடுக்க ரூ. 90 ஆயிரம் பணம் எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து, ஆவணமின்றி எடுத்துச் சென்ற பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.
