ADDED : மார் 11, 2026 04:51 AM

விருத்தாசலம்: கோவில் கட்ட இடையூறு ஏற்படுத்துவதாக கூறி ஆர்.டி.ஓ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் கிராம மக்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தை நேற்று காலை 11:00 மணிக்கு முற்றுகையிட்டனர்.
அப்போது, எடச்சித்துாரில், 'ஆண்ட பெருமான் கோவிலில், கடந்தாண்டு ஜூலை முதல், கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறோம். கடந்த, 6ம் தேதி கோவிலுக்கு வந்த சிலர், சுற்றுச்சுவரை இடித்து தள்ளி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கோவில் கட்டுமான பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்தனர். மேலும், ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியாவை சந்தித்து, கோரிக்கை மனு அளித்து கலைந்து சென்றனர்.

