ADDED : பிப் 11, 2026 03:49 AM

நெய்வேலி: பெற்றோரை அழைத்து வர வேண்டும் என பள்ளி ஆசிரியர் கூறியதால் மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து டவுன்ஷிப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள சதுரங்க வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் என்.எல்.சி., இன்கோசர்வ் சொசைட்டியில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் அஸ்வின்,13; இவர் என்.எல்.சி., பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.
அஸ்வின் மற்றும் அவரது நண்பர்கள் பள்ளியில் உள்ள சில பொருட்களை உடைத்ததாக தெரிகிறது.
இதனால் பள்ளி வகுப்பு ஆசிரியர் அஸ்வினை பள்ளிக்கு வரும் போது பெற்றோரை அழைத்து வரவேண்டும் என கூறியுள்ளார். இதனால் பயந்த போன அஸ்வின் நேற்று அவரது வீட்டில் படுக்கையறையின் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருந்த மின்விசிறி ஊக்கில் துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அப்பா கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் டவுன்ஷிப் சப் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

