ADDED : ஆக 21, 2026 09:54 PM
மல்லி, மிளகாய் மளிகைப் பொருட்கள் விலை...தட்டுப்பாடான பொருட்கள் இறக்குமதி செய்ய கோரிக்கை
பண்ருட்டி, ஆக. 22–அரிசி, மளிகை பொருட்கள் கிடுகிடுவென விலை உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் குடும்பம் நடத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மளிகைப் பொருட்கள் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் குடும்பம் நடத்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக மளிகைப் பொருட்கள் விளைச்சல் குறைந்து பற்றாக்குறை ஏற்படும்போது, 10 அல்லது 20 சதவீதம் உயர்த்துவது வாடிக்கை.
ஆனால் தற்போதெல்லாம் விலை உயர்வு என்பது திடீரென 100 சதவீதத்தையே தாண்டுகிறது. உதாரணமாக, கடந்த ஆண்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்ற மல்லி தற்போது 210 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகாய் ரகங்கள் தரத்திற்கேற்ப ஒரு கிலோ 120ல் இருந்து 150 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது கிலோ 260 முதல் 300 ரூபாயாக விலை உயர்ந்துள்ளன. சக்கரை கிலோ 40 ல் இருந்து 70 ஆக உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு 100ல் இருந்து கிலோ 140 ஆகவும். 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையான கடலைபருப்பு தற்போது 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. உடைத்த கருப்பு உளுந்து 100ல் இருந்து 120 ஆகவும், குண்டு உளுந்து ஒரு கிலோ 110 ரூபாயில் இருந்து 140 ஆகவும். வறுகடலை ஒரு கிலோ 90 லிருந்து 120 ரூபாயாகவும், பூண்டு கிலோ 150ல் இருந்து 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது போன்று இன்னும் பல பொருட்கள் உயர்ந்துள்ளன.இது குறித்து பண்ருட்டி மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக ஆந்திரா, மகாராஷ்ட்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய பகுதியில் மழை குறைவு. அதனால் விளைச்சல் இல்லாததால் வரத்து குறைவானது. இதனால் மல்லி, மிளகாய் விலைகள் ஒரு கிலோவிற்கு 100 முதல் ரூ150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளன.
பருப்பு ரகங்கள் ஒரு கிலோவிற்கு 10 முதல் 20 ரூபாய் வரை சிறிய அளவில் விலை உயர்ந்துள்ளன. அதுபோல் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு பகுதியில் நெல் உற்பத்தி குறைவால் அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 5 மாதங்களுக்கு முன் 26 கிலோ எடை கொண்ட சிப்பம் 1200 ரூபாயில் இருந்து 1700 ரூபாயாக உயர்ந்துள்ளது. எண்ணெய் ரகங்கள் பெரிய அளவில் உயரவில்லை.
மத்திய அரசு விலை உயர்வை கட்டுபடுத்திட முயற்சி செய்தும் பலனில்லை. அண்மைக்காலமாக மத்திய அரசு இந்தியாவில் இருந்து அரிசி, பருப்பு, பூண்டு, மல்லி, மிளகாய் உள்ளிட்ட ரகங்கள் ஏற்றுமதிக்கு அனுமதி தரவில்லை. ஏற்றுமதி இல்லாத நிலையிலும், எந்த ஆண்டும் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. அதிக விலை உயர்வு உள்ள பொருட்களான பூண்டு போன்றவற்றை வெளி நாட்டில் இருந்து இறக்குதி செய்திடவும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு முன் வர வேண்டும் என்றார்.
