/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துார் வாரப்படுமா விருத்தாசலத்தில் பரந்து விரிந்துள்ள கஸ்பா ஏரி... தண்ணீர் தேக்க முடியாமல் வெளியேறும் அவலம்
/
துார் வாரப்படுமா விருத்தாசலத்தில் பரந்து விரிந்துள்ள கஸ்பா ஏரி... தண்ணீர் தேக்க முடியாமல் வெளியேறும் அவலம்
துார் வாரப்படுமா விருத்தாசலத்தில் பரந்து விரிந்துள்ள கஸ்பா ஏரி... தண்ணீர் தேக்க முடியாமல் வெளியேறும் அவலம்
துார் வாரப்படுமா விருத்தாசலத்தில் பரந்து விரிந்துள்ள கஸ்பா ஏரி... தண்ணீர் தேக்க முடியாமல் வெளியேறும் அவலம்
ADDED : பிப் 05, 2025 06:25 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 278 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள கஸ்பா ஏரி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதுடன், துார்வாரப்படாமல் முட்புதர் மண்டியுள்ளதால், விவசாய பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலத்தில், சேலம் புறவழிச்சாலையில் கஸ்பா ஏரி உள்ளது. 278 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஏரிக்கு, மேமாத்துார் அணைக்கட்டு பாசன வாய்க்கால் வழியாக நீர்ப்பிடிப்பு கிடைப்பதால், ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழையின்போது எளிதில் நிரம்பிவிடும்.
இதன் மூலம் விருத்தாசலம் நகரை ஒட்டிய பகுதியில் 584 ஏக்கரும், ஆலிச்சிகுடி, இளமங்கலம், சாத்துக்கூடல் கீழ்பாதி உள்ளிட்ட கிராமங்களில் 508 ஏக்கர் பரப்பளவிலும் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டில், ஏரியின் நடுவே, விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை போடப்பட்டது. இதனால் சாலையின் இருபுற கரைகள், ஏரியை சுற்றிய பகுதிகளை தனிநபர் ஆக்கிரமிக்க துவங்கினர்.
மேலும் வீடுகள், காலியிடங்களில் குப்பைகளை கொட்டி பயன்படுத்த முடியாத நிலைக்கு மாற்றப்பட்டு விட்டது. அதுபோல், கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால், புறவழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஏரியை கடந்து செல்லும்போது முகம் சுழித்து வருகின்றனர்.
தற்போது, ஏரியின் பரப்பளவு சுருங்கி, புறவழிச்சாலையின் இருபுறம் குளம்போல காணப்படுகிறது. இதில் கோரை புற்கள், ஆகாய தாமரை, வேலிக்காத்தான், காட்டாமணி செடிகள் அதிகளவு மண்டி, துார்ந்து கிடக்கிறது. இதனால் ஏரியின் ஆழம் குறைந்து நீர்ப்பிடிப்பு பரப்பளவும் சரிந்தது. இதனால் விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழைக்கு முழு கொள்ளளவு நீர்ப்பிடிப்பு கிடைக்காத நிலையில், ஏரி விரைவில் நிரம்பி, மதகு வழியாகவும், கரைகள் வழியாகவும் சுற்றியுள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை மூழ்கடித்தது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் பல நாட்கள் மூழ்கி அழுகும் அவலம் ஏற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கஸ்பா ஏரியில் வண்டல் மண் அள்ளும் பணி நடந்தது. இதனால் ஏரி முழுவதும் துார்வாரப்பட்டு, நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிராக்டர்கள் சென்று வர ஏதுவாக கரைகளில் மட்டுமே அதிகளவு மண் எடுக்கப்பட்டது. இதனால் ஏரியின் கரைகள் பள்ளம் படுகுழிகளாக மாறின. ஆனால், ஏரி துார்வாரப்படாததால் முட்புதர்கள் அகற்றப்படவில்லை.
இதனை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நேற்று காலை வரை ஏரியில் எஞ்சியிருந்த மழைநீரும் மதகு வழியாக விளைநிலங்களில் தேங்கி வீணாகி வருகிறது. இதனால் கோடை காலத்தில் விவசாயப் பணிக்கு தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து, கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே, முதற்கட்டமாக ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரியில் மண்டியுள்ள ஆகாய தாமரை செடிகளை அப்புறப்படுத்தி தண்ணீரை தேக்கி வைத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.