/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாம்பாரில் விஷம் கலந்து மூவர் கொலை: 2 ஆண்டிற்கு பின் இருவர் சரண்
/
சாம்பாரில் விஷம் கலந்து மூவர் கொலை: 2 ஆண்டிற்கு பின் இருவர் சரண்
சாம்பாரில் விஷம் கலந்து மூவர் கொலை: 2 ஆண்டிற்கு பின் இருவர் சரண்
சாம்பாரில் விஷம் கலந்து மூவர் கொலை: 2 ஆண்டிற்கு பின் இருவர் சரண்
ADDED : ஜன 20, 2024 06:25 AM
விருத்தாசலம் : கள்ளக்காதல் விவகாரத்தில் சாம்பாரில் விஷம் கலந்து மூவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர், 2 ஆண்டிற்கு பின் நேற்று கோர்ட்டில் சரணடைந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் வேல்முருகன் இவரது மனைவி கீதா,33; இவர்களுக்கு அகிலேஷ்வர்,12; சரவணகிருஷ்ணன்,6; என்ற இரு மகன்கள் உள்ளனர்.
வேல்முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அதனால் கீதா மற்றும் அவரது மகன்களும், மாமனார் சுப்ரமணியன், மாமியார் கொளஞ்சியம்மாள் பாராமரிப்பில் இருந்து வந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி கீதா வைத்த முள்ளங்கி சாம்பாரை சுப்ரமணியன், கொளஞ்சியம்மாள், பேரன் சரவணகிருஷ்ணன்,6; பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபு மகன் நித்தீஷ்வரன்,8; மகள் பிரியதர்ஷினி ஆகியோர் சாப்பிட்டனர்.
சற்று நேரத்தில் 5 பேருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டது. உடன், அனைவருக்கும் கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கம், புதுச்சேரி ஜிப்மர் மற்றும் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், கொளஞ்சியம்மாள் ஜனவரி 4ம் தேதியும், சுப்ரமணியன் ஜன.5ம் தேதியும், நித்தீஷ்வரன் ஜனவரி 12ம் தேதி இறந்தனர்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பிரேத பரிசோதனையில், எலி பேஸ்ட் கலந்த முள்ளங்கி சாம்பாரை சாப்பிட்டதால் மூவரும் இறந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், வேல்முருகனின் மனைவி கீதாவிற்கு, விருத்தாசலம் புதுகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஹரிஹரன்,43; என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனையறிந்த கொளஞ்சியம்மாள், வெளிநாட்டில் இருந்த தனது மகன் வேல்முருகனிடம் கூறியுள்ளார்.
அதனால், ஆத்திரமடைந்த கீதா, மாமியாரை தீர்த்துகட்ட முடிவு செய்து, முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட் கலந்துள்ளார். அதனை சாப்பிட்ட கொளஞ்சியம்மாள், சுப்பிரமணியன், சிறுவன் நித்தீஸ்வரன் இறந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து கடந்த 2022ம் ஆண்டு மே 24ம் தேதி கீதா, கள்ளக்காதலன் ஹரிகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய கீதாவின் தந்தை ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் பூமாலை மற்றும் சகோதரர் வினோத்,38; ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த இவர்கள், 2 ஆண்டிற்கு பின் நேற்று விருத்தாசலம் ஜே.எம்.2 கோர்ட்டில் சரணடைந்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.