/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களூரில் பஸ் நிலையம் கிராம மக்கள் கோரிக்கை
/
மங்களூரில் பஸ் நிலையம் கிராம மக்கள் கோரிக்கை
ADDED : டிச 27, 2024 06:28 AM
சிறுபாக்கம்,: மங்களூரில் பஸ் நிலையம் கட்டித்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்களூர் ஊராட்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் , வங்கிகள், வணிக வளாகங்கள் உள்ளன.
இதனால், சுற்றுப்புற கிராம மக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வணிகர்கள், அரசு ஊழியர்கள் தினசரி வந்து செல்கின்றனர்.
மங்களூர் கிராமத்திற்கு விருத்தாசலம், வேப்பூர் திட்டக்குடி பகுதிகளிலிருந்து 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்குகிறது.
இந்நிலையில், மங்களூரில் பஸ் நிலையம் இல்லாததால் திட்டக்குடி - சிறுபாக்கம் சாலை யில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். மேலும், அவ்வழியே சாலையோரங்களில் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டித்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.