/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரி வறண்டது: சென்னைக்கு குடிநீர் நாளை முதல் 'கட்'
/
வீராணம் ஏரி வறண்டது: சென்னைக்கு குடிநீர் நாளை முதல் 'கட்'
வீராணம் ஏரி வறண்டது: சென்னைக்கு குடிநீர் நாளை முதல் 'கட்'
வீராணம் ஏரி வறண்டது: சென்னைக்கு குடிநீர் நாளை முதல் 'கட்'
ADDED : பிப் 25, 2024 05:19 AM

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரி வறண்டதால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நாளை 26ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி, காவிரி டெல்டா கடைமடை விவசாயிகளின் உயிர் நாடியாக உள்ளது. மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கல்லணை வழியாக, கொள்ளிடம் ஆற்றில் உள்ள கீழணையில் தேக்கி, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், மழைக் காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு வருகிறது.
ஏரியில் 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம், ஏரியில் இருந்து 34 பாசன மதகுகள் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், சென்னைக்கு தினமும் வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு, பாசனத்திற்காக, ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அங்கிருந்து ஜூன் 18ம் தேதி கீழணைக்கு வந்த தண்ணீர், வடவாறு வழியாக ஜூன் 24ம் தேதி வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது. இதனால், படிப்படியாக, வீராணத்தின் நீர் மட்டம் உயர்ந்து வந்த நிலையில், தொடர்ந்து சம்பா பருவத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. சென்னைக்கும் குடி நீர் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், கீழணை மற்றும் வீராணத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. கீழணையில் தண்ணீர் வற்றியதால், வீராணத்திற்கு தண்ணீர் அனுப்புவது ஒரு மாதத்திற்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால், வீராணம் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து, ஏரியின் பல பகுதி வறண்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, ஏரியில் வெறும் 26 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளதால், சென்னைக்கு அனுப்பி வந்த தண்ணீரின் அளவும், படிப்படியாக குறைத்து, நேற்று 16 கன அடி மட்டுமே அனுப்பப்பட்டது. இறுதிக்கட்ட பாசனத்திற்கு 33 கன அடி வெளியேற்றப்படுகிறது.
ஏரியின் நீர் மட்டம் முற்றிலும் குறைந்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நாளை முதல் நிறுத்தப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.