ADDED : மார் 21, 2026 09:48 PM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில், சட்டசபை பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது:
கடலுார் மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டு பதிவினை ஏற்படுத்திடும் வகையில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் பொது மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி வாயிலாகவும், அதிநவின மின்னணு திரை வாகனங்கள் வாயிலாகவும், கலைநிகழ்ச்சிகள், பேரணி, மனித சங்கிலி, மினி மாரத்தான் போன்றவை நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் பிரசுரிக்கப்பட்ட பதாகைகள் ஏந்திய வண்ணம் வாக்கத்தான் பேரணி நடந்தது.
வாக்காளர்கள் அனைவரும் நடைபெறவுள்ள தேர்தலில் தனது ஓட்டினை பதிவுசெய்து ஜனநாயக கடமையினை நிலைநாட்டிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பெரியார் கலைக்கல்லுாரி மாணவர்கள் பங்கேற்புடன் வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அனைவரும் ஏற்று கொண்டனர்.
மூத்தக்குடிமக்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க அதற்கான ஒப்புதல் மற்றும் விருப்பம் பெறும் வகையில் வாக்காளர் விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெறுவதனை மாவட்ட தேர்தல் அலுவலர் கடலுார் செம்மண்டலம் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., புண்ணிய கோட்டி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, விளையாட்டு அலுவலர் மகேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
